விழியழகி

மனம் பறித்திடும் பதுமை
உடல்மொழிதனில் புதுமை!
அவள் சிரித்திடும் அழகே
மனம் மறந்திடும் உலகை!
அவள் கார்குழல் சுழிக்க
என் கருவிழி தவிக்கும்!
ஓரிடம் கொள்ளா
அவள் மான்விழி கண்டு
தேறிடும் மனதும்
காதல் நோய்வாயப்படுதே!



முடிவு



ஒரு நீண்ட கவிதையொன்று
எழுதிக்கொண்டிருந்தேன்.
தொடக்கம் மறந்துபோனது!
முதலடியிலிருந்து வாசிக்கத் தொடங்கி
பொருத்தமான கடைசி வரி எழுதி
முடித்துக்கொள்ளலாமென்று தொடர்ந்தேன்!
பாதி வாசிப்பிலே
எழுத நினைத்த கவிதை
பொருத்தமாய் முடிந்திருந்தது!
எழுதி முடித்த வரிகளை என்னதான் செய்வது?
சலுகையாய் நினைத்து
இணைத்தே வாசித்தேன்
முடிக்காமால் விட்ட கவிதை
முற்றுபெற்றதுபோல் இருந்தது.
அடைப்புக்குறிக்குள் முற்றும்
போட்டு நானும் முடித்துக்கொண்டேன்!
நீங்கள் குழம்பியிருந்தால் மீண்டும்
ஆதியிலிருந்து தொடங்குங்கள்
கவிதை முற்று பெற்றிருக்கிறதா
என்பது பிரச்சினையில்லை - முதலில்
கவிதையாகவாவது தெரிகிறதாவென்று பார்க்கலாம்!